செல்லமாக வளர்க்கும் பூனைக்கு சீர்வரிசையுடன் சீமந்தம் - வைரலாகும் வீடியோ
திருவேற்காட்டில் செல்லமாக வளர்க்கும் பூனைக்கு சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடத்தி குடும்பத்தினர் மகிழ்ந்துள்ளனர்.
திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதி குமார். இவரது வீட்டில் நாய் மற்றும் பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்தநிலையில், இவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலையில் இருப்பதை உணர்ந்த அவர் அதற்கு சீமந்தம் நடத்த வேண்டுமென முடிவு செய்தார்.
இதையடுத்து கருவுற்றிருக்கும் பெண்களுக்கு செய்வது போன்று பூனைக்கு சீமந்தம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி செல்லமாக வளர்த்த பூனைக்கு அலங்காரம் செய்து, சீர்வரிசை தட்டுகள் வைத்து, ஏழு வகை உணவுகளோடு பூனைக்கு பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டன.
இதையடுத்து பூனையை சேரில் அமரவைத்து வளையல்களை பூனையின் கால்களில் அணிந்து உறவினர்களை அழைத்து சீமந்தம் நடத்தினார்கள். தனது பிள்ளைகள்போல பாவித்து வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு சீமந்தம் நடத்தி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறினர். மேலும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.