“அநீதிக்கு எதிரான மதங்கள் இஸ்லாமும் கிறிஸ்தவமும்! ஆனால் அம்மக்கள்...?” – சீமான் சர்ச்சை கருத்து!

“கேரளாவை போல தனியார் கடைகளிலும் குறிப்பிட்ட விலைக்குள் மட்டும்தான் தக்காளியை விற்பனை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சீமான், நாம் தமிழர் கட்சி
சீமான், நாம் தமிழர் கட்சிPT

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கூடிய அவரது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தி நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய தொகுதி பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசானை நடத்துகிறார் சீமான். மேலும் கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பணிகள், தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.

seeman
seemanpt desk

“நாம் தமிழர் கட்சி, தனித்து நின்று வெற்றி பெறும்” - சீமான்

இந்த கூட்டத்திற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்து வந்தாலும், இனியும் வளர மட்டுமே முடியாது. நம்பிக்கையோடும், வெறியோடும் களத்தில் பணியாற்றுகிறோம். வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணி, பாஜக கூட்டணி இருந்தாலும் நாம் தமிழர் கட்சி மக்களை மட்டுமே நம்பி போட்டியிடுகிறோம். கூட்டணியை நம்பி அல்ல. ஜெயலலிதா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு உண்டு. நாம் தமிழர் கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறும்.

“அண்ணாமலை பாதயத்திரை நடத்த அனுமதி இருக்கிறது. ஆனால்...”

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்க விவகாரம் தொடர்பாக போராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணாமலை பாதயத்திரை நடத்த அனுமதி இருக்கிறது, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி இருக்கிறது. ஆனால், சீமான் போராடுவதற்கு மட்டும் அனுமதியில்லை. நெய்வேலி விவகாரத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். கடந்த காலத்தில் கலைஞர் ஆட்சியில் நான் போராட அனுமதி கொடுத்து தடுத்தார்கள். கேட்டால் சீமான் பேசினால் மின் உற்பத்தி தடைபடும் என காரணம் சொன்னார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

“தக்காளி விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்”

தமிழ்நாடு அரசு கேரளாவை போல் தமிழ்நாட்டில் அனைத்து தனியார் மற்றும் அரசு கடைகளிலும் ஒரே விலையில் தக்காளியை விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும். இன்று தக்காளியை நியாயவிலை கடைகளில் வாங்கும் சூழலுக்கு வந்துவிட்டோம். அனைத்து நியாயவிலை கடைகளிலும் தக்காளி விற்பனை செய்வதில்லை. இன்று கிலோ ரூ.200. இன்னும் சில ஆண்டுகளில் தக்காளி கிலோ ரூ.2,000 வந்தால் மக்கள் சாப்பிடுவார்களா? சாவார்களா?. டிவி உள்ளிட்ட எதையெதையோ வழங்க இந்தியாவில் திட்டம் உண்டு. ஆனால், நீரும் சோறும் தேவைக்கு திட்டமில்லை. உணவு தேவை உயிர் தேவை. அதனால் வேளாண்மைக்கு திரும்ப வேண்டும்.

“இஸ்லாமும் கிறிஸ்தவமும் அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மதங்கள். ஆனால்...”

சிறுபான்மையினர் குறித்து தவறாக பேசிவிட்டதாக கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறும் ஜவாஹருல்லா போன்றோர் நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருந்துவதும் வருத்தம் தெரிவிப்பதும் என்னை சார்ந்த இஸ்லாமியர்களுக்குத்தான்.

Seeman
Seeman

அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மதங்கள் இஸ்லாமும் கிறிஸ்தவமும். ஆனால், இவர்கள் என்றாவது அநீதிக்கு எதிராக போராடியதுண்டா? முதுகில் குத்திய துரோகி கலைஞர் என ஜவாஹிருல்லா பேசினார். இன்று ஒரு சீட்டிற்காக அந்த துரோகியுடன் நிற்கின்றனர். சிறுபான்மையினர் குறித்த உரிமை, உறவு, வலி எல்லாம் எனக்குள்ளதால் நான் பேசுவேன்.

இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டத்தில் ராஜ்கிரண் ஈடுபட்டுள்ளார்?

என்னை பற்றி பேசுவதற்கு நடிகர் ராஜ்கிரண் அண்ணனிற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால், அவரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பேசுவதற்கு இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்?

காமராஜரையும் பாரதிதாசனையும் சாதிய தலைவர்களாக...

(மாமன்னன் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை சமூக வலைதளத்தில் அனைவரும் தங்கள் ஜாதி என கொண்டாடுகிறார்கள் என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில்...) தலைவர்களாக நன்றாக இருப்பவர்களை எங்கள் ஜாதிக்காரர் என சிலர் பயன்படுத்தி கொள்வார்கள். காமராஜர் நாடார் என்பார்கள். ஜாதி இல்லை என்று சொன்ன பாவேந்தர் பாரதிதாசனை முதலியார் என்பார்கள். அண்ணன் பிரபாகரனையே பிள்ளை சமூகம் என்கிறார்கள். ஒருவன் கெட்டால் அவனை கண்டுகொள்ள மாட்டார்கள். நன்றாக இருந்தால் தனதாக்கி கொள்வார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com