விவசாயிகள் மரணத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு: சீமான் குற்றச்சாட்டு
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க மத்திய அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சென்னையில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வடமாநிலங்களில் விவசாயிகள் உயிரிழந்தால் அது பெரும் துயரமாகக் கருதப்படுவதாக் கூறினார்.
தமிழக விசாயிகளின் மரணம் கண்டுகொள்ளப்படவே இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள இழப்பீடு போதாது என்று கூறிய சீமான், பயிருக்கு பதிலாக அவர்களது உயிர் அறுவடை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசிடம் தேவையான நிதியினைக் கோரிப்பெற்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடை வழங்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தினார்.