ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடத்தில் போலீசார் குவிப்பு
திருச்சியில் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. முடிவில் ஜல்லிக்கட்டிற்காக அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழக மக்களின் தற்போதைய அதிர்ச்சி செய்தி பேருந்து கட்டண உயர்வு. கடந்த 20ம் தேதி அமலுக்கு வந்துள்ள பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து கட்டணத் கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக மாணவ மாணவிகளின் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் அருகே ஜல்லிக்கட்டுக்காக கடந்த ஆண்டு போராட்டம் நடத்தப்பட்ட சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்துக்கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.