திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீப மலையிலும் மண்சரிவு அச்சம் உள்ளதா? கோயில் நிர்வாகம் கொடுத்த பதில்!
திருவண்ணாமலை தீப மலை 2,668 அடி உயரம் கொண்டது. கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மலை உச்சியில் கொப்பரை கொண்டு செல்லப்பட்டு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றம் முதல் 11 நாட்களுக்கு தினசரி அண்ணாமலையார் கோயிலில் விழாக்கள் நடைபெறும்.
தற்போது, திருவண்ணாமலை மலையில் 3 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தீபத்திருவிழாவில் எதுவும் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம், தீபக் கொப்பரை ஏந்திச்செல்வது, 15 கிலோ கொண்ட நெய் டின்னை தலையில் சுமந்து மலை உச்சிக்கு கொண்டு செல்வது, திரி கொண்டு செல்வது, தீபம் ஏற்றுவது என தினசரி 300 முதல் 400 பேர் வரை மலையில் ஏறி இறங்குவர்.
தீபத்திருநாளில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மலையில் ஏற அனுமதி வழங்கப்படும். ஆதார் அடையாள அட்டையுடன் அனுமதி கோருவோருக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் இதில் மாற்றமிருக்காது என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காரணம், மகா தீபம் ஏற்றப்படும் இடம், மலையின் மேற்கு பகுதியில் இருக்கிறது. மலையின் வடக்கு பகுதி வழியாக மக்கள் ஏறி செல்வது வழக்கம்.
மண் சரிவுகள் நடந்த இடமோ, தெற்கு பகுதியில் இருக்கிறது. 7 பேரின் உயிரை பறித்த மண்சரிவு ஏற்பட்ட இடம், கோயிலின் கிரிவலப் பாதையில் கணக்கிட்டால் சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவு இருக்கிறது. 2 ஆவது மண்சரிவு ஏற்பட்ட இடம் 600 மீட்டர் தொலைவில் இருக்கிறது. 3 ஆவது மண் சரிவு ஏற்பட்ட இடமோ சுமார் அரைகிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதனால் மகா தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது