அக்காவை காணவிடாமல் தடுத்த காவலாளிகள் : துப்பாக்கியால் சுட்ட தம்பி

அக்காவை காணவிடாமல் தடுத்த காவலாளிகள் : துப்பாக்கியால் சுட்ட தம்பி
அக்காவை காணவிடாமல் தடுத்த காவலாளிகள் : துப்பாக்கியால் சுட்ட தம்பி

போரூர் அருகே பங்களா குடியிருப்பு வளாகத்தில் கேரள வாலிபர் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே உள்ள சாய்ராம் நகரில் பங்களா குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு சூர்யகாந்த் (38) மற்றும் சுனிதா (35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார்கள். நேற்றிரவு சுனிதாவின் தம்பி தீபக் கேரள மாநிலத்திலிருந்து சென்னை வந்துள்ளார். நள்ளிரவில் சுனிதாவின் குடியிருப்புக்குள் செல்ல முயன்ற அவரை காவலாளிகள் உள்ளே விட மறுத்தனர். இதனால் காவலாளிக்கும், தீபக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த தீபக் தனது காருக்குள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதைக் கண்டதும் அங்கிருந்த காவலாளிகள் உயிருக்கு பயந்து சிதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தீபக் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் செம்பேடு பாபு, மாங்காடு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சில குழப்பங்கள் இருப்பது தெரியவந்தது. சுனிதாவை பார்க்க அவரது தம்பி தீபக் கேரளாவில் இருந்து வந்துள்ளார். வரவேண்டாம் என சுனிதா தெரிவித்துள்ளார். அதனை கேட்காமல் தீபக் வந்துள்ளார். இதனால் காவலாளிகளிடம் தீபக்கை உள்ளே விட வேண்டாம் என்று சுனிதா கூறியதாக தெரிகிறது. மேலும் தீபக்கிற்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், ஆகவே தான் அவரை உள்ளே அனுப்ப வேண்டாம் என காவலாளிகளிடம் சுனிதா கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்த குழப்பங்களை அறிந்த காவல்துறையினர், குடும்ப பிரச்சினை காரணமாக அக்காவை தீர்த்துக்கட்டும் நோக்கில் தீபக் வந்தாரா? அவர் வருவது தெரிந்தும் வீட்டிற்குள் அனுப்ப வேண்டாம் என சுனிதா கூறினார்? என்ற பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் கேரளா தப்பிச்சென்ற தீபக்கை சென்னை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com