“ பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா”- சென்னையில் பதற வைக்கும் சம்பவம்

“ பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா”- சென்னையில் பதற வைக்கும் சம்பவம்
“ பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா”- சென்னையில் பதற வைக்கும் சம்பவம்

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தி வருகிறார் சஞ்சீவ்(45). இவர் திருச்சியை சேர்ந்தவர். பெண்களுக்கான தங்கும் விடுதி என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து விடுதியில் பேயிங் கெஸ்டாக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே அறையில் சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி அடிக்கடி ஏதேதோ செய்துள்ளார் சஞ்சீவ். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை ரகசிய கேமரா வைக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பெண்களுக்கு ஏற்படவே உஷாரான அவர்கள் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தங்களது மொபைலில் உள்ள செல்போன் செயலி  (Hidden Camera Detector App) மூலம் விடுதி அறையில் ரகசிய கேமராக்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். யாருக்கும் தெரியாமல் கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி (ஆங்கர்) உள்ளிட்ட இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பெண்கள் அனைவரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சஞ்சீவை கைது செய்த ஆதம்பாக்கம் போலீசார் அவரை அழைத்து சென்று தங்கும் விடுதியில் விசாரணை மேற்கொண்டு அறையில் இருந்த ரகசிய கேமராக்களையும், அவரது எலக்ட்ரானிக் சாதனங்கள், 16 செல்போன், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற போலி ஆவணங்களையும்  கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சீவ் மீது 2011 முதல் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், இவர் பல பெயர்களில் போலி ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே சஞ்சீவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்..? இதற்கு முன்பும் அவர் ஏதேனும் விடுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா..? போன்ற பல கோணங்களில் அவர் மீதான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தகவல்கள்: சாந்தகுமார் (செய்தியாளர்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com