தூத்துக்குடி பணத்திற்கு ஆசைப்பட்டு 2-வது திருமணம் செய்த ஆசிரியர் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் மனைவி குழந்தையுடன், ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மாரியம்மாளுக்கும் (32) காட்டுராமன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களுக்கு இரண்டரை வயதில் இந்துமதி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாரியம்மாளுடன் பேச்சுவார்த்தையை தவிர்த்து வந்த லட்சுமணன், தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக நித்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதை அறிந்த மாரியம்மாள், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், அவரது புகாரின் மீது போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்தார்.
இந்நிலையில் அவர், கலெக்டர் அலுவலக வாயில் முன்பு திடீரென குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். மாரியம்மாள் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை என கூறி தொடர் தர்ணாவில் ஈடுபட்டார்.
போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் மகளிர் போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் விசாரணை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், மாரியம்மாளின் புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு ஆவன செய்வதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தார்.