சென்னை எண்ணூர் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காசி விஸ்வநாத குப்பத்தில் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அடுப்பில் விறகு எரிக்கும் போது குடிசை ஒன்றில் தீப்பற்றியது. அப்போது, பலத்த காற்று வீசியதால் மளமளவென அருகிலிருந்த குடிசைகளிலும் தீப்பற்றியது. இந்த விபத்தில் 60க்கும் அதிகமான குடிசை வீடுகள் தீக்கிரையாகின. திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, எண்ணூரிலிருந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன.
வீட்டிலிருந்த அத்யாவசியப் பொருட்கள், பணம், நகை, சான்றிதழ்கள் என அனைத்தும் தீக்கிரையாகியதால் மக்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து 6ஆவது முறையாக தீ விபத்து ஏற்படுவதால் தங்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிப்புகள் குறித்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சாமி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை குறித்து நாளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் என எம்.எல்.ஏ சாமி தெரிவித்துள்ளார்.