சென்னை தாம்பரம் அருகே கேம்ப் ரோட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.
சென்னை - தாம்பரம் அருகே கேம்ப் ரோடு - மப்பேடு சாலை, தனக்கே உரிய பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை சாலையில் வைத்திருந்தனர். எல்லாம் குழப்பமின்றி போய்க் கொண்டிருக்கையில் அந்த இயல்புநிலையைப் புரட்டிப் போட வந்தது ஒரு சிவப்பு நிறக் கார். ஒரு பள்ளி மாணவன் அந்த காரை ஓட்டி வந்தார்.
திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சி போல தாறுமாறாக வந்த அந்தக் கார் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதுடன் நிற்காமல், அவ்வழியே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களையும் தூக்கி வீசியது. கார் தூக்கி வீசியதில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த கிளாட்சன், விக்ரம், ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் காயமடைந்தனர். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் உதவிக்கரம் நீட்ட, காயமடைந்த 4 பேரும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ச்சியூட்டும் இந்தக் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.