பள்ளி மாணவி தற்கொலை - ஆசிரியர் திட்டியது காரணமா?
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி பூரணசெல்வி இவர்களுடைய மகள் மரிய ஐஸ்வர்யா(16) அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்லாமல், இரண்டு நாள் விடுமுறை எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பள்ளிக்கு வந்த ஐஸ்வர்யாவை, பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ஞானப்பிரகாசம் என்பவர் திட்டியதாகவும் ஐஸ்வர்யாவை தோப்புக்கரணம் இடச்சொல்லி தண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா தொடர்ந்து வருத்தத்தில் இருந்துவந்துள்ளார். இன்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு ஐஸ்வர்யா செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து வீட்டில் அவருடைய பெற்றோர் கேட்டதற்கு பள்ளிக்கு செல்ல தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஐஸ்வர்யாவை வீட்டில் தனியாக விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு வெளியே சென்றுள்ளனர்.
பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யாவின் தம்பி, ஐஸ்வர்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
ஐஸ்வர்யா இறந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஐஸ்வர்யாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

