வாலாஜாப்பேட்டை: திடீரென மயங்கிவிழுந்து பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
வாலாஜாப்பேட்டை அடுத்த சுமைதாங்கி பகுதி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிஷா என்ற மாணவி பாடத்தை கவனித்துக்கொண்டிருக்கும் பொழுதே வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மயங்கி விழுந்த மாணவியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களிடம் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். பெற்றோர், தங்கள் மகளுக்கு இறுதி சடங்கு செய்ய இருந்த நிலையில் இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உடனடியாக மாணவியின் வீட்டிற்குச் சென்று, உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
பின் மாணவியின் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவிக்கு ஏற்கெனவே இதயநோய் இருந்ததாகவும், அதற்கு தற்பொழுது சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறினர்.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வகுப்பறையில் மாணவி மயங்கி வழும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.