சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் தங்க ஏதுவாக உடனடியாக திறந்துவைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகளில் தங்க வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் தங்க ஏதுவாக உடனடியாக திறந்துவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும், சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், பள்ளிகளில் உள்ள கணினி உள்ளிட்ட மின்னனுக் கருவிகளை பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் துரிதகதியில் பணிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.