வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய பாக்கியராஜ் என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் இதை தெரிவித்தார்.
கோராந்தாங்கலில் தனியாருக்கு சொந்தமான இடம் ஒன்றில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டி முடிக்கப்பட்ட மேற்கூரை திடீரென இன்று இடிந்து விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய தொழிலாளர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீசன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் விபத்து நிகழ்ந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி திறக்கப்பட்டப் பின் இது போன்று விபத்து நிகழ்ந்திருந்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.