ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தமிழகம் முழுவதும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதனையடுத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனமும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடைக் கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.