எஸ்சி, எஸ்டி உதவித் தொகையில் மத்திய அரசு ஆயிரத்து 803 கோடி ரூபாய் நிலுவை
கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
எஸ்சி , எஸ்டி மாணவர்களின் கல்லூரி படிப்புக்காக மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் உடனடி சேர்க்கையில் இணைந்து பயிலும் எஸ்சி , எஸ்டி மாணவர்களுக்கு இத்தனை நாளாக வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்தும் விதமாக மத்திய அரசு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர், புதிய விதி மூலம் உயர் மற்றும் தொழில் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்பையே தட்டி பறிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு இதுவரை ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவை வைத்திருப்பதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எஸ்சி, எஸ்டி மாணவர்களை பாதிக்கும் விதிகளை திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.