சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
2001ம் ஆண்டு ஜீவஜோதி என்பவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஜீவஜோதி. அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். 2001ம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்து கொள்ள சரவணபவனின் உரிமையாளர் ராஜகோபால் விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்கு இடையூறாக இருந்ததால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ராஜகோபால் தனது ஆட்களுடன் கடத்திச் சென்று கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சரவணபவன் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். அதேசமயம் 10 ஆண்டு சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டுமென அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்ப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2009ம் ஆண்டு ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. ஆயுள் தண்டனை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் மேற்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில், ஜீவஜோதி என்பவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரவணபவன் உரிமையாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது.