சத்தியமங்கலம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி

சத்தியமங்கலம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி
சத்தியமங்கலம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி

திம்பம் மலைப்பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 வயது பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. வாகன பதிவெண்களைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் ஏராளமான யானை, சிறுத்தை, புலிகள் உள்ளன. தமிழகம், கர்நாடகத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில், வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால், அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக செல்லும் வாகனங்களை 30 கிமீ வேகத்துக்கு குறைவாக இயக்க வேண்டும் என வனத்துறை ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.

இந்நிலையில் இன்று திம்பத்தில் இருந்து ஆசனூர் செல்லும் சரிவான பாதையில், வனத்துறை ஊழியர் குடியிருப்பில் இருந்து எதிர்புறமாக சாலையை கடந்த 3 வயதுள்ள பெண் சிறுத்தை அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவயிடத்திலேயே பலியானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி, ஆய்வு செய்ததில் சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து திம்பம் பாதையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து சாலை விபத்தில் சிறுத்தை உயிரிழந்தபோது அவ்வழியாக சென்ற வாகனங்களின் பதிவுவெண்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து வாகனத்தில் அடிபட்டு இறந்த சிறுத்தையின் உடலை தலமலை வனத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com