எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அரசியல் வேண்டாம் என்ற மனநிலையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வத்தை தான் ஊட்டியதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
போயஸ்கார்டனில் பேசிய சசிகலா, எம்ஜிஆர் மறைவின்போது கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவை அவரது இறுதிச் சடங்கின் போது அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஜெயலலிதா, தமக்கு கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தார். உங்களை எதிர்த்தவர்கள் முன்னால் வளர வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவுக்கு நான்தான் அரசியல் ஆர்வத்தினை ஊட்டினேன். அத்தகையை சூழலில் இருந்து இன்றைய நிலைக்கு அதிமுகவைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஜெயலலிதா மறைந்த போது, கட்சியை உடைக்க சதி நடந்தது. அதைத் தடுப்பதற்காக நான் உடனடியாக பன்னீர் செல்வத்தையும் அமைச்சர்களையும் உடனடியாக பதவி ஏற்கச் சொன்னேன். அப்போது பன்னீர் செல்வமே நான்தான் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றார். எனக்கு அப்போது ஜெயலலிதாவின் உடல் அருகில் இருப்பதுதான் முக்கியம். அப்படி தேவை என்றால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். எனக்கு பதவி ஆசை இல்லை. நான் நினைத்திருந்தால் அப்போதே முதலமைச்சராகியிருக்க முடியும் என்று சசிகலா கூறினார். பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் திமுகவினருடன் நெருக்கம் காட்டியதைக் கண்ட பிறகுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். இந்த முடிவுக்கு என்னைத் தள்ளியதே பன்னீர் செல்வம்தான். அவர் நன்றி இல்லாமல் அதிமுகவைப் பிரித்தாள நினைக்கிறார் என்று சசிகலா கூறினார்.