மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை சந்திக்க அவரது மனைவி சசிகலாவிற்கு பரோல் கேட்டு விண்ணப்பிப்பதற்கான பணிகள் நாளை துவங்கும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சை எடுத்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, நாள்தோறும் அப்போது மருத்துவமனைக்கு சென்று கணவரை கவனித்துக் கொண்டார். பின்னர் சிசிக்சை முடிந்து நடராஜன் நலமுடன் வீடு திரும்பினார்.
இதனிடையே நடராஜனுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், சுவாசக் கருவிகள் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை சந்திக்க அவரது மனைவி சசிகலாவிற்கு பரோல் கேட்டு விண்ணப்பிப்பதற்கான பணிகள் நாளை துவங்கும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்தான் உள்ளார். மருத்துவர்களும் அவருக்கு தீவிர சிசிக்சை அளித்து வருகின்றனர்” என்றார். சசிகலாவிற்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லையா எனக் கேட்டபோது, “ 6 மாதம் வரை பார்த்த நபரையே மீண்டும் பார்க்கக்கூடாது என சட்டம் இருக்கிறது. இன்று நீதிமன்றம் விடுமுறை. நாளை வழக்கறிஞர்கள் மூலமாக பரோல் எழுதிக் கேட்டும் பணி தொடங்கும். சசிகலா நிச்சயமாக அவரது கணவரை பார்க்க வருவார்.” என தெரிவித்தார்.