அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா காணொலி மூலம் இன்று ஆஜராகவில்லை.
தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறையினர் 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா, எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து பாஸ்கரன் ஆஜரான நிலையில், ஆணை உரிய நேரத்தில் கிடைக்காததால் சசிகலா இன்று ஆஜராகவில்லை. இதனையடுத்து வரும் 28ஆம் தேதி சசிகலா காணொலி மூலம் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.