எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பிரிந்திருந்த அதிமுகவை நான் தான் இணைத்தேன்- சசிகலா

எல்லோரையும் ஒன்றாக இணைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்: எம்ஜிஆர் இறந்தவுடன் ஜானகி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது அதை ஒன்றாக இணைத்தேன்: இப்போதும் இதை நான் கஷ்டமாக நினைக்கவில்லை.
sasikala
sasikalapt desk

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா திருவாரூர் நாகை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தங்கிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் இந்தியாவிற்கு பெருமை என நினைத்து எதிர்க் கட்சிகள் பங்கேற்க வேண்டும். ஆனால், எதிர்க் கட்சிகள் இருக்கிறது என்பதை வெளிகாட்ட வேண்டும் என்பதற்காக திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

mgr
mgrpt desk

ஒரு கட்சி அல்லது ஒரு இயக்கம் என்று இருந்தால் அது தொண்டர்கள் விருப்பம் தான் வெற்றி பெறும். அதனடிப்படையில் பார்த்தால் தொண்டர்கள் விருப்பம் என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

ஏற்கெனவே வெளிநாடு பயணம் சென்ற தமிழ்நாடு முதல்வர் என்ன கொண்டு வந்தார். தற்பொழுது இரண்டாவது முறை வெளிநாடு பயணம் சென்று என்ன கொண்டுவரப் போகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளை திமுக அரசு தக்க வைத்துக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் திமுக ஆட்சி வந்த பின்னர் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவுள்ளதாக தெரிவிக்கின்றனர். மின்சாரம் போதுமானதாக இல்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கிவர தயக்கம் காட்டுகிறது. இதை மறைப்பதற்காக முதல்வர் வெளிநாடு சென்றிருப்பதாக நான் கருதுகிறேன்.

கட்சிக்காரர்கள் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே தலைவனாக திகழ முடியும். இதை வருங்காலத்தில் நீங்கள் உணருவீர்கள் என்றவரிடம் ஓ.பன்னீர்செல்வம் உங்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளாரா? அல்லது அதிமுக மூன்று அணியாக செயல்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோரையும் ஒன்றாக இணைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். எம்ஜிஆர் இறந்தவுடன் ஜானகி அம்மா அணி, அம்மா அணி என பிரிந்திருந்த போது அதை ஒன்றாக இணைத்தேன். இப்போதும் இதை நான் கஷ்டமாக நினைக்கவில்லை. என்னை பொருத்தவரை நான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறேன்.

jayalalitha
jayalalithapt desk

தமிழ்நாட்டில் 25 சதவீதம் மட்டுமே அனுமதி பெற்ற பார்கள் இயங்குகிறது. துணிக்கடை போல் மீதமுள்ள பார்கள் அனுமதியின்றி இயங்கி வருகிறது. அனுமதியின்றி பார்கள் இயங்குவது தமிழ்நாடு முதல்வருக்கு தெரியாதா? அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரியாதா? தமிழ்நாட்டு மக்களை அதிமுகவால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதை எப்படி செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டை திமுக கையில் ஒப்படைக்க விடமாட்டோம். உண்மையான அதிமுக நாங்கள்தான். வரும் தேர்தலுக்குள் நாங்கள் எல்லாம் நிச்சயம் ஒன்று சேருவோம்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எப்படி சிறப்பாக ஆட்சி செய்தார்களோ அதுபோல் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்வோம் என்றார் நம்பிக்கையுடன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com