பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு: ஆக. 30ஆம் தேதி விசாரணை!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சசிகலா, உயர்நீதிமன்றம்
சசிகலா, உயர்நீதிமன்றம்file image

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றபிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்துசெய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம், ஆர்.கலைமதி அமர்வில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com