‘ஜெயலலிதா மரணத்தில் விசாரிக்க வேண்டியதே அவங்களை தான்’: சசிகலா வழக்கறிஞர்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆணையம், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலரை அழைத்து விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், தினகரனின் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருப்பதாக கூறினார். எனவே தங்களால் நாளை ஏழு மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய இயலாது என விசாரணை ஆணையத்தில் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
காலம் தாழ்த்தக்கூடாது என்ற அடிப்படையில் நாளை விமலா மற்றும் நாராயணபாபு ஆகிய இரண்டு மருத்துவர்களிடம், தனது உதவி வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள் எனவும், எஞ்சிய ஐந்து மருத்துவர்கள் உட்பட 13 பேரை வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதி குறுக்கு விசாரணை செய்ய விசாரணை ஆணையம் அனுமதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலரை அழைத்து விசாரிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.