சேலம் வழியாக வெடி மருந்துகள் கடத்தப்படுவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 29 ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கருப்பூர் சுங்கச்சாவடி அருகே மாநகர தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஈச்சர் வாகனத்தில் வைக்கோல் குவியலுக்கிடையே ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டரை டன் ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை வாகனத்தோடு பறிமுதல் செய்த போலீசார், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓட்டுனர் இளையராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக கோவைக்கு வெடி பொருட்கள் கடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்த நிலையில், கேரளாவில் இயங்கி வரும் சட்டவிரோத கல் குவாரிக்கு உரிய ஆவணங்களின்றி கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை கடத்த முயன்றது தொடர்பாக விசாரணைக்குப் பின்னர் ஓட்டுனர் இளையராஜாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய போலீசார், தருமபுரியை சேர்ந்த மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர்.