தேர்வு அறையில் சபீர் ப்ளூடூத் உபயோகிக்கவில்லை: வழக்கறிஞர் பேட்டி
ஐ.ஏ.எஸ் முதன்மைத் தேர்வில் ப்ளுடூத் மூலம் காப்பியடித்ததாக கைதான சபீர் கரீம், தேர்வு அறையில் எந்த தகவல் தொடர்பு உபகரணத்தையும் பயன்படுத்தவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 30ந் தேதி நடந்த ஐ.ஏ.எஸ் முதன்மைத் தேர்வில் காப்பியடித்ததாக சபீர் கரீம் என்ற ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவி செய்ததாக அவரது மனைவி ஜாய்சி அவருடைய நண்பர் சம்ஜத், ஐ.ஏ.எஸ் அகடமி ஊழியர் சபீப் மற்றும் தனியார் ஐ.ஏ.எஸ் அகடமி இயக்குநர் ராம் பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் மனைவியுடன் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
மறுஉத்தரவு வரும்வரை சபீர்கரீம், தினந்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சிபிசிஐடி அலுவலகத்தில் சபீரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 9 மணி தேர்வுக்கு 8.55 மணிக்கு சபீரிடம் இருந்து செல்போன், ப்ளுடூத் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. அப்படி இருக்க அவர் முறைகேடு செய்ததாக எப்படி கூற முடியும்? இந்த வழக்கு தவறாக புரிந்து கொண்டு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்றார்.