'பிரதிஷ்டா தினம்' | சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு..!
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலை நடை, மலையாள இடவம் மற்றும் தமிழ் வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, மாதாந்திர முறைக்காக கடந்த மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு மே 19ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் 'பிரதிஷ்டா தினத்தை' முன்னிட்டு இன்று (ஜூன் 4ம் தேதி) மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுவார்.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து நாளை (ஜூன் 5-ம் தேதி) 'பிரதிஷ்டா தின' சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாளையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு பூஜைகளுக்குப் பின் நாளை (05.06.25) இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். சபரிமலையில் ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தன்று சாமி தரிசனம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
மலையாள 'மிதுனம்' மாதம் மற்றும் தமிழின் 'ஆனி' மாத பூஜைக்காக வரும் ஜூன் 14ம் தேதி நடை திறக்கப்பட்டு, ஜூன் 19ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும்.பக்தர்கள், தரிசனத்திற்கு sabarimalaonline.org.in முன்பதிவு செய்யலாம் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.