“இளையராஜா வேண்டாம் என்றதால் அந்தப்படத்த விட்டுட்டோம்” - இயக்குநர் எஸ்பி முத்துராமன் சுவாரஸ்ய தகவல்!
சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் சந்திப்பில் “மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்” எனும் தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு, இயக்குநர் முத்துராமன், பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா, மேயர் பிரியா மற்றும் வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் வடிவேலு குறித்து பேசிய இயக்குநர் முத்துராமன், “வாழ்க்கையில் நினைத்தது அனைத்தும் நிறைவேறி விடாது. நான் 71 படங்களை இயக்கியுள்ளேன். அண்ணன் சிவாஜியை வைத்து 3 படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து 25 படங்களையும், கமல்ஹாசனை வைத்து 10 படங்களையும், மற்ற நடிகர்களை வைத்து சில படங்களையும் என மொத்தமாக 71 படங்களை இயக்கியுள்ளேன்.
இவ்வளவு செய்த நான் பேச்சிலும், வசனத்திலும், உடல் மொழியிலும், நகைச்சுவையிலும் முத்திரை பதித்த வைகை புயல் வடிவேலுவை வைத்து இன்னும் ஒரு படம் கூட இயக்கவில்லை.
ஆனால் ஒருசமயம் வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அத்திரைப்படமானது கவிஞர் வாலியின் கதை வசனத்தில், நடிகர் வடிவேலுவை கதாநாயனாக வைத்து நான் இயக்க நினைத்த திரைப்படம். அதன் பெயர் ‘இளையராஜாவின் மோதிரம்’. இந்தத் திரைப்படம் எடுப்பதற்கான எல்லா அனுமதியும் பெற்று விட்டோம்.
ஆனால், அப்போது இளையராஜா என்னை அழைத்தார்... அவர் சொன்ன ஒரு விஷயம், படம் பண்ண முடியாமல் போய்விட்டது” என்றார். அது என்ன விஷயம்? கீழ்க்காணும் வீடியோவை கண்டு தெரிந்துகொள்ளுங்கள்...
பின்னர் பேசிய எஸ்.பி.முத்துராமன், “ஆனால் நிச்சயம் ஒன்று கூறுகிறேன். நேரமும், காலமும் சரியாக இருந்தால் நானும் நீங்களும் (வடிவேலுவும்) நிச்சயம் சந்திப்போம்” என்று தெரிவித்தார்.