மகா தீபம் அணைந்துவிட்டதாக பரவிய வதந்தி.. வீடுகளில் வழிபட்ட மக்கள்..!
திருவண்ணாமலையில் மகா தீபம் அணைந்துவிட்டதாக வதந்தி பரவியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கார்த்திகை விழாவின் போது மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்தச் சுடர் எரிக்கப்படுகிறது. இந்தச் சுடர் 11 நாட்கள் எரியும் என கூறப்படுகிறது. 60 கி.மீட்டர் தூரம் வரை இந்தச் சுடர் ஒளி தெளிவாக தெரியும்.
இந்தாண்டு கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண அருணாச்சலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்து மகா தீபத்தை கண்டு களித்தனர்.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் எரியும் நிலையில் மகா தீபம் அணைந்துவிட்டதாக வதந்தி பரவ தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வாசல் தெளித்து, கோலமிட்டு விளக்கு ஏற்றிவைத்து வழிபாடு நடத்தினர்.