“ஜெயலலிதா வழியை பின்பற்றியதால் செந்தில் பாலாஜிக்கு வந்த நெருக்கடி” – ஆர்.எஸ்.பாரதி பேட்டி
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்குச் சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திந்துப் பேசியுள்ளார். மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் நியாயமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம். மேகதாது விவகாரத்தில் நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்து தவறானது. எடப்பாடி எப்போது உண்மை பேசி இருக்கார்?
ஜெயலலிதா வழியில் செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார். ஜெயலலிதா, டான்சி வழக்கில் நிலத்தை எப்படி திருப்பி ஒப்படைத்தாரோ அதேபோல செந்தில் பாலாஜி தான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். அம்மா வழியை அவரும் பின்பற்றியுள்ளார். அம்மா வழியை பின்பற்றியதால் வந்த விளைவு தான் தற்போது செந்தில் பாலாஜிக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது எல்லாமே அதிமுக ஆட்சிக்கு காலகட்டத்தில் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, அய்யா வழியில் செந்தில் பாலாஜி திருந்தி செயல்படுவார்.
அண்ணாமலை கை அரிவாள் பிடித்த கை என்றால், எங்கள் கை பேனா பிடித்த கை, எங்களுக்கு எழுத மட்டுமே தெரியும்.
நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தான் வழக்கு தொடர்ந்தேன். அதன் பின் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம், தற்போது எடப்பாடி பழனிசாமி விருப்பபடி தமிழக காவல்துறையே இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று கூறினேன். மற்றபடி அவர் மேல் உள்ள வழக்கை நான் வாபஸ் வாங்கவில்லை.
தமிழக ஆளுநருக்கான முற்றுப் புள்ளியை அவரே வைத்துக் கொள்வார் என நினைக்கிறேன். தற்போது டெல்லி சென்றுள்ள அவர் ஆலோசனை பெற்று வருகிறாரா அல்லது ஆளுநராக திரும்ப வருகிறாரா? என்பது வந்த பிறகு தான் தெரியும்.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கு விசாரணையில் உள்ளது. முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகு தான் அதற்கான காரணம் தெரியும். அதற்கிடையில் இதை அரசியலாக்கக் கூடாது, இந்த தற்கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு எந்த வழக்கையும் கண்டுபிடிக்கவில்லை.
மத்திய அரசுக்கு வெளிநாட்டு எதிரிகளின் சதியை முறியடிப்பதற்கு கப்பற்படை, ராணுவம்ஈ விமானப்படை ஆகிய மூன்று படைகள் உள்ளதோ, அதேபோன்று உள்நாட்டு எதிரிகளை பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

