திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (20). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அம்பத்தூர், பச்சையப்பன் பிரதான சாலையைச் சேர்ந்த சத்ய நாராயணன் (38), அவரது மனைவி ஷாலினி, (33) மாதவரம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (29) ; ஆகியோர் அறிமுகமானதாகவும், சத்ய நாராயணன் என்பவர் தனக்கு பல அரசியல் கட்சியினரை தெரியும் என்றும் அவர்கள் வாயிலாக, கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அதனை நம்பிய காயத்ரி உட்பட எட்டு பேரிடம் 74 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, ஒரு மாதம் ஆகியும் வேலை வாங்கித் தராததால் சந்தேகமடைந்த காயத்ரி, அம்பத்தூரில் உள்ள நாராயணன் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளர். அப்போது, அவர்கள் மூவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி, மோசடி குறித்து கடந்த 2021 ல் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஷாலினி மற்றும் தாமஸ் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சத்ய நாராயணனை தேடி வருகின்றனர்.