சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடல்: புதுச்சேரி அரசுக்கு ஒரு நாள் இழப்பு ரூ.40 லட்சம்?
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வந்த சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு நாளொன்றுக்கு 40 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 87 சாராயக்கடைகளும், 63 கள்ளுக்கடைகளும் இயங்கி வந்தன. இவற்றுக்கான ஏலம் இணையதளம் மூலமாக ஜூன் 19-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் 28 சாராயக்கடைகளும், 27 கள்ளுக்கடைகளும் மட்டுமே ஏலம் போயின. இதன் காரணமாக கலால்துறை அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் ஏலம் போன கடைகளுக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் முந்தைய உரிமம் முடிவடைந்ததால் நேற்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.