விபத்தில் அடிபட்டு சுயநினைவு இழந்தவருக்கு 24 லட்சம் இழப்பீடு

விபத்தில் அடிபட்டு சுயநினைவு இழந்தவருக்கு 24 லட்சம் இழப்பீடு
விபத்தில் அடிபட்டு சுயநினைவு இழந்தவருக்கு 24 லட்சம் இழப்பீடு

சாலை விபத்தில் அடிபட்டு சுயநினைவு இல்லாமல் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட பெண்ணுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.24 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த ராமாபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி(45). மகன் பார்த்திபன். சிறுமுகையில் இருந்து இருசக்கர வாகனத்தில் விஜயலட்சுமி, பார்த்திபன் ஆகியோர் பவானிசாகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பார்த்திபன் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். பின்னால் விஜயலட்சுமி அமர்ந்திருந்தார். அப்போது தொட்டிபாளையம் என்ற இடத்தில் ஊட்டியைச் சேர்ந்த சிந்தேகுண்டே என்பவரின் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி, தனியார் மருத்துவயில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோமா நிலைக்கு சென்றார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி நடந்த விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரின் காப்பீடு நிறுவனமான நேஷனல் காப்பீடு நிறுவனம் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இதனிடையே இந்த விபத்தில் சுயநினைவின்றி கோமா பாதிப்பில் வாழ்ந்து வரும் விஜயலட்சுமி, தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்றம் மனுவின் மீது நடவடிக்கை எடுத்து காப்பீடு நிறுவனம் மற்றும் மனுதாரர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து  சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி, ஒய்வு பெற்ற நீதிபதி ராமராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க நேஷனல் காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை பெறுவதற்கு ஆம்புலன்ஸில் விஜயலட்சுமி அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் ஆம்புலன்ஸில் விஜயலட்சுமிக்கு இழப்பீடு தொகைக்கான உத்தரவை நீதிபதிகள் வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com