கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள ஆக்ஸிஸ் வங்கியில், தனது பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து 11 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக கூறி பாதிக்கப்பட்ட ஜாஹிர் உசேன் என்பவர் வங்கியின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள ஆக்ஸிஸ் வங்கியில் கார் எடுப்பதற்காக 11 லட்சம் லோன் கேட்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்திருந்தார். ஆனால் மாதா, மாதம் செலுத்தவேண்டிய தொகை அதிகம் என கூறி அந்த லோன் தனக்கு வேண்டாம் எனக்கூறி வங்கியில் அதிகாரியிடம் முறைப்படி எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜாகிர் உசேன் வீட்டிற்கு வங்கியில் இருந்து, தாங்கள் கார் வாங்க பெற்ற கடனுக்கு 4 மாதமாக பணம் செலுத்தவில்லை என கடிதம் வந்ததை கண்டு ஜாகிர் உசேன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வங்கியை அணுகி தனது பெயரில் எந்த பணமும் வாங்கவில்லை எனக்கூறி தனது வங்கி கணக்கை காட்டியுள்ளார். அப்போது தான் தனது பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து 11 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் வங்கியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.