துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் ?

துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் ?
துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் ?

திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

அதேபோல் வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜின் வீட்டில் 2 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதேபோல, காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும், பள்ளியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்நிலையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி, பண்ணை வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக இது குறித்து பேசிய துரைமுருகன், வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. அதை திசைதிருப்பவே சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com