கொள்ளை அடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்!

கொள்ளை அடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்!
கொள்ளை அடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்!

மதுரவாயலில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம், மெட்ரோ நகர், 4வது அவென்யூவை சேர்ந்தவர் டெம்பிள் வில்லியம் (47). இவர் வளவசரவாக்கத்தில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். கோடை விடுமுறையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அஸ்சாம், மேகாலயா போன்ற வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார் டெம்பிள். இந்நிலையில் டெம்பிள் வீட்டை நோட்டமிட்டுள்ள கொள்ளையர்கள், வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியாமல், டெம்பிள் வீட்டிற்கு ஹோட்டல் மேனேஜர் சுரேஷ் வந்துள்ளார். அவர் பார்க்கும் போது வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மதுரவாயல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். அதில், வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் விலையுயர்ந்த கேமரா போன்றவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க பீரோ போன்ற இடங்களில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா சென்றுள்ள வீட்டின் உரிமையாளர் திரும்ப வந்த பிறகே, கொள்ளை போனது மொத்தம் எவ்வளவு என்பது முழுமையாக தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com