ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுமா அல்லது வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுமா என்பது இன்று மாலை தெரியவரும்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு 82 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசிநாளாகும். தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மொத்தம் 64 வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே இடம்பெற செய்யமுடியும். அதில் ஒரு இடம் நோட்டாவுக்கு ஒதுக்கப்படும். எனவே 63 வேட்பாளர்களின் பெயர்கள்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற முடியும். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது 82 வேட்பாளர்கள் இருப்பதால் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிந்தபிறகும் 63-க்கும் அதிகமானோர் களத்தில் இருந்தால் தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.