உயரும் மூலப்பொருள்கள் விலை: வேலைநிறுத்தத்தை அறிவித்த தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள்

உயரும் மூலப்பொருள்கள் விலை: வேலைநிறுத்தத்தை அறிவித்த தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள்
உயரும் மூலப்பொருள்கள் விலை: வேலைநிறுத்தத்தை அறிவித்த தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள்

மூலப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வரும் 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூட அவற்றின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். சீனாவில் இருந்து அனுமதி இல்லமால் வரும் லைட்டர்களை மத்தியரசு தடை செய்ய, திப்பெட்டி ஆலையின் உரிமையாளர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என செயல்பட்டு வருகின்றன. தீப்பெட்டி உற்பத்தியை பொறுத்தவரை தேவையான முக்கிய மூலப்பொருள்களாக இருப்பவை பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் ஆகியவை. இது அனைத்து பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு நெடுங்காலமாக தொடர்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ 1க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலை, ரூ 2 என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உயர்த்தினர். இது அவர்களுக்கு ஓரளவுக்கு கை கொடுக்க தொடங்கிய போதும், கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்ததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கினர்.

இதையெடுத்து கடந்த 22-ம் தேதி நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை 300 ரூபாயில் இருந்து 350 ஆக உயர்த்த முடிவு செய்தனர். ஏப்ரல் 1 முதல் இந்த விலை நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த முடிவினை மொத்த வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்படியான சூழலில்தான் இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. அதில் தொடர்ந்து தீப்பெட்டி மூலப்பொருள்களின் விலை அதிகரித்து வருவதால் பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில், ஏப்ரல் 6 முதல் 17ம் தேதி வரை ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் `சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்தியரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஏப்ரல் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளனர். இதற்கு கோவில்பட்டி லாரிகள் ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் நம்மிடையே கூறுகையில், “மூலபொருள்களின் கட்டுபாடு இல்லாத விலையேற்றத்தின் காரணமாக தீப்பெட்டி உற்பத்தியின் அடக்க விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. அந்தக் காரணத்தினால் வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால் ஒரு நாளைக்கு 7 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்படும். நேரிடையாக, மறைமுகமாக 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கபடுவார்கள். மத்திய, மாநில அரசுகள் பல சலுகைள் வழங்கியுள்ளதாகவும், சீனாவில் இருந்து அனுமதி இல்லமால் இந்தியாவிற்கு வரும் லைட்டர்கள் காரணமாக 30சதவீதம் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அரசு தங்களுக்கு உரிய நடவடிக்கையை செய்யும் என்ற எதிர்ப்பார்ப்புடன் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com