Pride Month | வானவில் நிறங்களில் ரிப்பன் மாளிகை.. ஒளிரவிடப்படும் வண்ண விளக்குகள்!
தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட ’அனைத்துக் காதலும் காதலே’ என்பதை அடிப்படையாக கொண்டு உலக அளவில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பிரைட் (PRIDE) மாதம் கொண்டாடப்பட்டு வருக்கிறது. சென்னையிலும், சாதி, வர்க்கம் மற்றும் பாலின பாகுபாடின்றி வானவில் கொடிகளுடன் ப்ரைட் பேரணி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இந்தசூழலில் தான், சென்னை மாநகராட்சியின் கீழ், நிர்பயா நிதி ஆதரவுடன் செயல்படும் பாதுகாப்பான நகரம் திட்டத்தின் (Safe City Project) ஒரு பகுதியாக இயங்கும் பாலின மற்றும் கொள்கை ஆய்வகம் (GPL), விழிப்புணர்வு, ஆய்வு, கொள்கை ஆதரவு மற்றும் சமூக ஈடுபாட்டு முயற்சிகளின் மூலம், சென்னை நகரில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான பொதுத் தளங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல, சமூக உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் பாகுபாடு அற்ற நிலை ஆகியவற்றிற்கான தனது உறுதியை வெளிப்படுத்தும் வகையில், சென்னைப் பெருநகர சென்னை மாநகராட்சி பாலின மற்றும் கொள்கை ஆய்வகம் மூலம், தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பு (TNRC) மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் இணைந்து, பிரைட் மாதம் 2026 அனுசரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு தன்மைகளையும் அனைவரையும் உள்ளடக்கும் மதிப்புகளுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகை இன்று முதல் 30.06.2026 வரை வானவில் நிறங்களில் ஒளிரவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் தான், இன்று ரிப்பன் மாளிகையில் வானவில் நிறங்கள் ஒளிரவிடப்பட்டிருக்கின்றன.
