அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. நடத்தை விதிகளில் தமிழக அரசு திருத்தம்!
மாநில அரசு ஊழியர்களுக்காக 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில் திருத்தம் செய்து, புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், அரசுக்கு எதிரான கருத்துக்களை அரசு ஊழியர்கள் எந்த வகையிலும் தெரிவிக்கக் கூடாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், சங்க பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு அரசு ஊழியரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ, அதற்கான தூண்டுதல்களில் ஈடுபடவோ கூடாது என்றும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பதும், கடமைகளை புறக்கணிப்பதும் போராட்டமாகக் கருதப்படும் எனவும் புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ, ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது என்றும், அதில் உரையாற்றக் கூடாது எனவும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.