டெல்டா மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்
டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவோ தேவையில்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சை மாவட்டம் கத்தரிநத்தம், அழகியநாயகிபுரம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கிராம சபை கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.