"உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம்" உச்சநீதிமன்றம் உத்தரவு !
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டியலினப் பிரிவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக அரசு அருந்ததியர் சமூகத்துக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இது ஏற்கெனவே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 18% இட ஒதுக்கீட்டிலிருந்து உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டதாகும். உள் ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.
இதனையடுத்து இதுதொடர்பான தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பட்டியிலினத்தவருக்கான உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உத்தரவிட்டு. மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.