இருமுறைக்கு மேல் நீட் எழுதியவர்களே அதிகம் தேர்ச்சி
தமிழ்நாட்டில் இந்தாண்டு மருத்துவ படிப்பிற்கான இடங்களை நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதியவர்களே அதிகம் பெறவுள்ளதாக தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாட்டில் 48.57 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 9.01 சதவிகிதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தேசிய தேர்வு மையம் நீட் தேர்வு தொடர்பான ஒரு புள்ளிவிவரத்தை அளித்துள்ளது. அதில் இந்தாண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 60% பேர் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை நீட் தேர்வு எழுதியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தாண்டு 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 14,443 மாணவர்களில் 8688 மாணவர்கள் 12வகுப்பை கடந்தாண்டு முடித்தவர்கள்.
இதனால் இம்முறை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவில் பழைய மாணவர்களே இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 2447 பேரில் 1,277 பேர் அதற்கு முந்தைய ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்து முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.