“அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”-நீதிமன்றம்

“அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”-நீதிமன்றம்

“அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”-நீதிமன்றம்
Published on

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார். அப்போது டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக் குழு கூட்டத்தை கூட்டி தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரியும் 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச் செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் சட்ட விரோதம் என உத்தரவிடக் கோரியும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த நிலையில் சசிகலா வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை, கட்சியும் சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாகவும் கூறியிருந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா தரப்பில் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com