சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மழை வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சீர்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வெளியூர் சென்றவர்களை சென்னைக்கு வரவேண்டாம் என ஆட்சியாளர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என விமர்சித்துள்ள சசிகலா, வெளியூர் சென்றவர்கள் சென்னையிலுள்ள வீடு மற்றும் உடைமைகளை பாதுகாக்க வரத்தானே செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வருவோருக்கும் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சசிகலா, வெள்ளத்தால் பாதிக்காத சென்னையை உருவாக்குவேன் என 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்ததாகவும் அந்த கனவு விரைவில் நனவாக வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.