தருமபுரி: குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு பின் தெளியாத மயக்கம்; உயிரிழந்த பெண்

தருமபுரி: குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு பின் தெளியாத மயக்கம்; உயிரிழந்த பெண்
தருமபுரி: குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு பின் தெளியாத மயக்கம்; உயிரிழந்த பெண்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையின் போது தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாகக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் சார் ஆட்சியரின் காரை முற்றுகையிட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையனூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கும், சேலம் மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் சூர்யா இரண்டாவது பிரசவம் முடிந்து, இரண்டாண்டுகளுக்கு பிறகு, குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடிவு செய்து தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக் கிழமை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்தும், சூர்யா மயக்கம் தெளியாமல் இருந்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் கணவரை அழைத்த செவிலியர்கள், அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது, நீங்கள் போய் பேச்சு கொடுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் கணவர், உள்ளே சென்று மனைவியிடம் பேசியுள்ளார். ஆனால், எந்த அசைவுமின்றி சூர்யா படுத்திருந்ததால்; அதிர்ச்சியடைந்து வெளியே வந்த கோவிந்தராஜ் செவிலியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், செவிலியர்கள் அறுவை சிகிச்சையின் போது மயக்கமடையாததால், கூடுதலாக மருந்து செலுத்தப்பட்டதாகவும், மயக்கம் தெரிந்துவிடும் எனக்கூறி, ஒப்புதல் கையெழுத்திடச் சொன்னதாக கூறப்படுகிறது.

இதற்கு முடியது என சூர்யாவின் கணவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சூர்யா மயக்கம் தெரியாத நிலையில், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனியின்றி இன்று அதிகாலை இறந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சூர்யா இறப்புக்கு காரணம் தவறான குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்தததுதான். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, இறந்த சூர்யாவின் உடலை வாங்காமல் இருந்தனர். அப்போது விசாரணைக்கு வந்த சார் ஆட்சியர் சித்ராவின் காரை முற்றுகையிட்டனர். பின்னர் உறவினர்களிடம் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தருமபுரி மருத்துவமனையில் சூர்யாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விவரம் தரவேண்டும். சூர்யாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு சார் ஆட்சியர் சித்ரா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் தாயை இழந்த சூர்யாவின் குழந்தைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் என சூர்யாவின் கணவர் கோவிந்தராஜ், தமிழ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com