சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை சேலத்தில் மீட்பு
சென்னை மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் இன்று மீட்கப்பட்டது.
திருவண்ணாமலையை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அவருடன் இரண்டரை வயது மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் தான் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு வேலை வாங்கி தரும்படியும் எழும்பூர் மருத்துவமனையில் பணிபுரியும் சுமித்ரா எனும் காவலாளியிடம் உதவி கேட்டுள்ளார். அவர், வேறொரு பெண்ணை மணிமேகலைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் வேலை கிடைக்கும் என்று இரண்டு பெண்கள் மணிமேகலையை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.
மணிமேகலை பரிசோதனையில் இருந்தபோது, 15 நாள் குழந்தையை இரண்டு பெண்களும் காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. மணிமேகலையின் இரண்டு வயது மகள் பரிசோதனையின் போது உடன் இருந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் கொண்டு குழந்தைகளை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குழந்தையை சேலத்தைச் சேர்ந்த 3 பேர் கடத்திச் சென்றதாக தெரிய வந்தது. இதையடுத்து சேலம் சென்ற தனிப்படை போலீசார், குழந்தையை இன்று மீட்டனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

