“ஏழைகளுக்கு மட்டுமே ரேஷன் அரிசி கிடைக்க வேண்டும்”- சென்னை உயர்நீதிமன்றம்
ஏழைகளுக்கு மட்டுமே ரேஷன் அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் புகார் தொடர்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்தாண்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி திட்டத்திற்காக எவ்வளவு தொகை கடந்தாண்டு செலவிடப்பட்டது போன்ற விவரங்களை அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அத்துடன் ரேஷன் கார்டு உள்ள அனைத்து மக்களுக்கும் ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஏழை மக்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தப்படுவதால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்படுவதாக கூறினார்.
கடந்த ஆண்டு செலவிடப்பட்ட ரூ.2110 கோடி பணத்தை கொண்டு மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுருந்தால், அனைவரும் பயனடைந்து இருப்பார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார். ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் ரேஷன் அரிசி என்றில்லாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே ரேஷன் அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தேர்தல் லாபத்திற்காக இலவசங்களை வழங்கி மக்களை கையேந்த வைப்பதா? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும், அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும் செலவு குறித்தும் நவம்பர் 30-ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.