பல்கலைக்கழக வளாகத்தில் தோழனோடு இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. புதுவையில் அதிர்ச்சி சம்பவம்!
செய்தியாளர் : ஸ்ரீதர்கதிரேசன்
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை, முதுநிலை படிப்புகளில் பல்வேறு மாநிலங்களை சேர்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பலகலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாமாண்டு படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி இதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல், அந்த இருவரையும் எதற்காக இங்கு வந்தீர்கள் எனக்கேட்டனர்.
இதனை தட்டிக்கேட்ட மாணவரை அந்த கும்பல் தாக்கியுள்ளது. பின்னர் அங்கிருந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளனர். மேலும் அந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சித்த போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் கத்தி கூச்சலிடவே பயந்து போன அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது.
பின்னர் மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர் வடமாநில மாணவி என்பதால் காவல்துறைக்கு செல்ல பயந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடந்த சம்பவங்கள் குறிந்து புகார் அளித்துள்ளார்.
மாணவியை பாலியல் தொல்லை செய்ய முயற்சித்த மூன்று பேரில் ஒருவர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவதும், அவர்தான் மற்ற 2 பேரையும் அழைத்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 2 பேர் காலாப்பட்டு பகுதியையும், ஒருவர் வில்லியனூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல். வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் புதுச்சேரியிலும் அதேபோல ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவியை பாலியல் தொல்லை செய்ய முயன்ற சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.