பாம்பன்|மீனவர் வலையில் சிக்கிய கூறல் மீன்கள் - ரூ.4.20 லட்சத்திற்கு ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து நேற்று காலை 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதையடுத்து மீன்பிடித்து விட்டு இன்று (புதன்கிழமை) மீனவர்கள் கரை திரும்பினர். இந்நிலையில், மீனவர் வலையில் மூன்று ஆண் கூறல் மீன்கள் மற்றும் ஒரு பெண் கூறல் மீன் என நான்கு மீன்கள் சிக்கின.
சுமார் 120 கிலோ எடை கொண்ட இந்த நான்கு மீன்களும் சராசரியாக கிலோ ஒன்றிக்கு ரூ.4 ஆயிரம் வீதம், ரூ.4.20 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. ஆனால், கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மது பானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளை சுவையாகவும், கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர்.
கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலையுயர்ந்த சூப் தயாரிக்க பயன்படுத்துவதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் வலையில் சிக்கிய நான்கு கூறல் மீன்களும் ரூ.4.20 லட்சத்துக்கு ஏலம் போனது மீனவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.